தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு துப்பாக்கி சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர் தூத்துக்குடி நகர் முழுவதும் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து அகற்ற வேண்டும், தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தூத்துக்குடி மாவட்டம் அல்லது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது.
இன்று ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் தமிழ்நாடு நாட்டுப் படகு ஒருங்கிணைப்பாளர் ரீகன் தலைமையில், உயிரிழந்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் பாத்திமா நகர் பகுதியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் பாத்திமா நகர், பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது. பின்னர் உயிரிழந்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட போராட்டக் குழுவினர் திமுக அரசு ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை வைத்து ஆட்சிக்கு வந்த நிலையில் தற்போது தங்களது கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றவில்லை. மேலும், துப்பாக்கி சூட்டில் பலியான 16 பேருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். துப்பாக்கி சூடுக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அருணா ஜெகதீசன் அறிக்கை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை எனவே உடனடியாக நிறைவேற்றப்பட்டது வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.